2000yr old Thirukural

Thursday, September 2, 2010

பவாருக்கு உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடி

உணவு தானியங்களை கிடங்குகளில் அலட்சியமாக கொட்டிவைத்து அவற்றை கெட்டுப்போகச் செய்தாலும் செய்வோமே தவிர, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு அவற்றை எடுத்து விநியோகிக்கவெல்லாம் முடியாது என 'தெனாவட்டு' காட்டிய மத்திய வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சர் ஷரத் பவாரை விளாசித்தள்ளியுள்ளது உச்ச நீதிமன்றம்!

கடந்த மாதம் பருவமழை தீவிரமடைந்து பஞ்சாப் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, மத்திய அரசின் உணவுக்கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் தண்ணீரில் மூழ்கி கெட்டுப்போனது.

வெறும் சிமெண்ட் தரையில் உணவு தானியங்களைக் கொட்டிவைத்து, அவற்றை சாதாரணமாக தார்பாயைக் கொண்டு மூடி வைத்திருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்வது தெரிந்தும் அவற்றை பேணுவதற்கான எந்த முயற்சியையும் உணவுக்கழக அதிகாரிகள் மேற்கொள்ளாததை பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் பிற ஊடகங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தன.

இது குறித்த செய்தியை பார்த்த பல்வேறு தரப்பினரும் ஆவேசத்துடன் கொதிப்படைந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பியுசிஎல் என்ற அமைப்பு சார்பில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பொது விநியோக முறையில் ஊழல்கள் மலிந்து கிடப்பதாகவும், நாட்டில் ஆயிரணக்கணக்கானோர் உணவின்றி பட்டினியால் தவிக்கும்போது, உணவுக்கிடங்குகளில் உணவு தானியங்கள் கெட்டுபோய் வீணாகிக்கொண்டிருப்பதாகவும், எனவே உணவு தானியங்களை இப்படி வீணடிப்பதற்குப் பதிலாக அவற்றை ஏழைகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து இம்மாதம் 12 ஆம் தேதியன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உணவு தானியங்களை உணவுக்கிடங்குகளில் கெட்டுப்போகச் செய்து வீணாக்குவதற்குப் பதிலாக, அவற்றை பசியால்வாடும் ஏழைகளுக்கு ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் மாவட்ட மற்றும் மண்டல் அளவிலான உணவுக் கிடங்குகள் தவிர, பெரிய உணவு தானிய கிடங்குகளையும் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து, இனியாவது வீணாகும் வாய்ப்புள்ள உணவு தானியங்களை ஏழைபாழைகளுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் பசித்து தவிக்கும் ஏழை பாழைகள் மீது ஆட்சியாளர்களுக்கு அத்தனை சீக்கிரம் இரக்கம் பிறந்துவிடுமா என்ன?

இருப்பினும் உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருப்பதால், தாமதானாலும் இலவச உணவு தானியங்களை வழங்குவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ஏழைகளுக்கு, பவாரிடமிருந்து வந்தது அந்த அலட்சிய மற்றும் தெனாவட்டான பதில்!!..

உச்ச நீதிமன்றம் 12 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு, படு நிதானமாக 'ரியாக்ட்' செய்த பவார், வீணாகும் இலவச உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகவெல்லாம் உணவு தானியங்களை வழங்க முடியாது; அதை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று செய்தியாளர்களிடம் அலட்சியமாக கூறினார்.

அதாவது, உணவு தானியங்களை உணவுக் கிடங்குகளில் அலட்சியமாக இருப்புவைத்து அவற்றை கெட்டுப்போகச் செய்தாலும் செய்வோமே தவிர, அதற்கென்று பணியாளர்களை நியமித்து வீணாகக்கூடிய சாத்தியம் உள்ள தானியங்களை எடுத்து ஏழைகளுக்கு வழங்குவதெல்லாம் முடியாத காரியம் என்பதுபோன்று அவரது பதில்.

மேலும் உச்ச நீதிமன்றம் இதை ஒரு யோசனையாகத்தான் கூறியுள்ளதே தவிர, உத்தரவெல்லாம் பிறப்பிக்கவில்லை என்றும் கூறிய அவர், "உச்ச நீதிமன்றம் சொல்வதை அரசு ஏற்கனவே செய்துகொண்டுதான் இருக்கிறது. அரிசி, கோதுமை போன்றவற்றை அரசு மலிவான விலையில் வழங்கிக் கொண்டுதானே உள்ளது" என்று படுதெனாவட்டு காட்டியிருந்தார்.

மொத்தத்தில் மாட்டை சாட்டையால் அடித்து விரட்டுவது போன்று, உத்தரவாக பிறப்பித்தால்தான் செயல்படுவோம் என்பது போன்று பவார் அளித்த இந்த பதிலால், செம கடுப்பானது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில்தான் மேற்கூறிய பொதுநலன் மீதான இன்றைய விசாரணையின்போது, பவாரின் தெனாவட்டு பேச்சுக்காக அவரை காய்ச்சி எடுத்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர், கெட்டுப்போகச் சாத்தியமுள்ள உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நாங்கள் கூறியது யோசனை அல்ல உத்தரவு என்று குறிப்பிட்டதோடு, பவாருக்கு தங்களது கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

"
நாங்கள் கூறியது யோசனை அல்ல; அது நாங்கள் பிறப்பித்த உத்தரவு.உங்கள் அமைச்சரிடம் போய் இதைச் சொல்லுங்கள்" என்று அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞரிடம் சீறித்தள்ளினர் நீதிபதிகள்.

மேலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்கள் "அந்தோதயா அன்ன யோஜனா" திட்ட பயனாளிகள் ஆகியோர்கள் பற்றிய புதிய சர்வே ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பல ஆண்டுகால பழமையான புள்ளிவிவரங்களை நம்பிக்கொண்டு அதன் அடிப்படையில் அரசும், அதிகாரிகளும் செயல்படக்கூடாது என்றும் காட்டமாக குறிப்பிட்டனர்.

அத்துடன் உணவு தானியங்களை எவ்வளவு பாதுகாப்பாக இருப்பு வைத்துக்கொள்ள முடியுமோ, அந்த அளவு தானியங்களை மட்டும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், உணவு தானியங்கள் இனியும் கெட்டுப்போகாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

கூடவே வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்பவர்களுக்கு, பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறும் தகுதி இல்லை என்ற தனது முந்தைய உத்தரவை மீண்டும் வலியுறுத்துவதாக கூறிய நீதிபதிகள், அதே சமயம் இந்த பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு விரும்பினால், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்களுக்கும் அதனை வழங்கலாம் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

உத்தரவிடவில்லை என்று கூறிய பவாருக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த சாட்டையடி போதுமா?

No comments:

Blog Archive